மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நடைபெற்ற துலா உற்சவ தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடல் செய்தனர்.
மயிலாடுதுறை: ஆண்டு தோறும் ஐப்பசி 1 அன்று தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி, அமாவாசை தீர்த்தவாரியுடன் ஐப்பசி 30 அன்று கடைசியாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு துலா உற்சவ தீர்த்தவாரி அக்டோபர் 18 அன்று தொடங்கியது.
மயிலாடுதுறை: நேற்றைய கடைமுக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி நதியில் புனித நீராடி வழிபட்டனர்.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், தெப்பக்குள காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் தென்கரையில் எழுந்தருளினர். காவிரி வடக்கரையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் மற்றும் காசிவிஸ்வநாதர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காவிரி தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியர் முன்னிலையில், வடக்கரையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் 280 போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

