Home » ரோடு ஷோ, கட்சி கூட்டங்களுக்கு புதிய வரைவு வழிகாட்டுதல்கள்: நகல் ஹைகோர்ட்டில் தாக்கல்

ரோடு ஷோ, கட்சி கூட்டங்களுக்கு புதிய வரைவு வழிகாட்டுதல்கள்: நகல் ஹைகோர்ட்டில் தாக்கல்

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவதற்கு தொடர்பான வரைவு வழிகாட்டு விதிமுறைகளின் நகலை தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பின்னணியில், அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோ போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, கடந்த விசாரணையின் போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு 10 நாட்களுக்குள் அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து வழிகாட்டு விதிகளை உருவாக்கி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

உத்தரவினை ஏற்று, தமிழக அரசு அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக, இன்று அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான வரைவு வழிகாட்டு விதிமுறைகள் நகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

விசாரணை நடைபெறும் போது, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என தவெக உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதற்கு தமிழக அரசு,
“ஒவ்வொரு விதியையும் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக எதிர்க்கும் வாய்ப்புள்ளதால், அனைவருக்கும் நகல்களை வழங்க முடியாது” என்று எதிர்ப்பு தெரிவித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *