சென்னை: தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்பான விவகாரத்தில், டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் தாக்கல் செய்த மனுவில், டீசல் விலை உயர்வு, அரசு வழங்கும் இலவச பயண பாஸ் உள்ளிட்ட காரணங்களால் தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு மற்றும் போக்குவரத்து துறை ஆணையரிடம் முன்பே மனு அளித்திருந்ததையும், அந்த கோரிக்கையை பரிசீலித்து கட்டணத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டதாகவும், தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கடந்த மார்ச் மாதத்தில் கூட்டமும் நடத்தப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து உரிமையாளர்களின் கருத்துகளை அனுப்புமாறு கூறியபோதும், அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜஹான் ஆகியோர் ஆஜராகி, இதுவரை மொத்தம் 950 பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கான கூட்டத்தை நடத்தி, இறுதி முடிவு டிசம்பர் 30ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்.
அரசின் இந்த உறுதிப்பாட்டை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்துவைத்ததுடன், அரசு எடுக்கும் இறுதி தீர்மானத்தை 2026 ஜனவரி 6ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

