சென்னை: வங்கக் கடலில் நவம்பர் 22-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 24-ஆம் தேதியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் தாக்கத்தால் தமிழகத்தில் நாளை முதல் 25-ஆம் தேதி வரை பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: தற்போது குமரிக்கடல் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் அருகிலுள்ள மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 22-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னரும் 48 மணி நேரத்தில் அதே திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் தமிழகத்தில் நாளை (நவ.20) ஓரிரு இடங்களில், 21-ஆம் தேதி சில இடங்களில், மேலும் 22 முதல் 25-ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை வாய்ப்பு (மாவட்டங்கள் வாரியாக):
நவம்பர் 20:
மயிலாடுதுறை, கடலூர் — ஓரிரு இடங்களில் கனமழை.
நவம்பர் 21:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் — ஓரிரு இடங்களில் கனமழை.
நவம்பர் 22:
டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை),
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை,
காரைக்கால் — ஓரிரு இடங்களில் கனமழை.
நவம்பர் 23:
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,
டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை,
காரைக்கால் — பல இடங்களில் கனமழை.
நவம்பர் 24:
ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர்,
காரைக்கால் — ஓரிரு இடங்களில் கனமழை.
நவம்பர் 25:
டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம்,
புதுச்சேரி, காரைக்கால் — ஓரிரு இடங்களில் கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலோர எச்சரிக்கை:
நவம்பர் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். மேலும், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 60 கிமீ வேகத்திலான பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மழைப்பதிவு (கடைசி 24 மணி நேரம் – இன்று காலை 8.30 மணி வரை):
தமிழகத்தில் பதிவான மழை அளவுகளின்படி,
திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 23 செ.மீ
நாலுமுக்கில் 21 செ.மீ
காக்காச்சியில் 19 செ.மீ
மாஞ்சோலையில் 18 செ.மீ
தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 14 செ.மீ
தென்காசி — 13 செ.மீ
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை — தலா 10 செ.மீ
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 9 செ.மீ
மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

