நாகை மாவட்டத்திற்கு டிசம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நாகை:
நாகை மாவட்டம் நாகூரில் உலகப் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இத்தர்காவிற்கு வெளிமாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் இந்த தர்காவில், வருடாந்திர பெரிய கந்தூரி விழா அதீத விமரிசையாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான 469-வது பெரிய கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 1-ந்தேதி அதிகாலை பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி மற்றும் கந்தூரி விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகம்மது காஜி ஹு.சா.ஹிப் மற்றும் போர்டு ஆஃப் டிரஸ்டிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இவ்விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 13-ம் தேதி பணி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார்.

