Home » “காஷ்மீர் மாணவர்கள் சிக்கலில்: குண்டுவெடிப்பு தொடர்ந்து சமூக புறக்கணிப்பு, மிரட்டல் புகார்”

“காஷ்மீர் மாணவர்கள் சிக்கலில்: குண்டுவெடிப்பு தொடர்ந்து சமூக புறக்கணிப்பு, மிரட்டல் புகார்”

புதுடில்லி:
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், வட மாநிலங்களில் தங்களை சந்தேகத்துடன் அணுகப்படுகிறார்கள் என காஷ்மீர் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு அமைப்புகள் நடத்தும் விசாரணைகள் காரணமாக தங்களிடம் வெளிப்படையாக அவநம்பிக்கை, சமூக புறக்கணிப்பு, மறைமுக மிரட்டல் போன்ற சூழல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், சில பகுதிகளில் உள்ளூர் கடைகள் தங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்க மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை நாளேட்டிடம் டெல்லியில் பயிலும் சில காஷ்மீர் மாணவர்கள் தெரிவித்ததாவது:

“இதுவரை நெருக்கமாக பழகிய சக மாணவர்கள் கூட இப்போது எங்களை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். எங்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என மறைமுகமாக பேசப்படுவது காதில் விழுகிறது. வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் நடத்தைமூலம் நாங்களும் மாற்றத்தை உணருகிறோம். இந்தியர்கள் என்றே இருந்தாலும், பாதுகாப்பு கண்காணிப்பில் உள்ளவர்களாக உணரத் தோன்றுகிறது,” என தெரிவித்தனர்.

ஹரியானாவின் பரிதாபாத் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் சுமார் 2,000 பேர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே செயல்படும் காஷ்மீர் மாணவர் சங்கங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன.

அந்தக் கடிதத்தில்:

“வட மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் திடீர் கேள்விக்குறியாக்கப்படுகின்றனர். விசாரணை காரணமாக அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். இந்த ஆபத்தான போக்கை உடனடியாக நிறுத்தி, மாணவர்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்ய வேண்டும்,” என கோரப்பட்டுள்ளது.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *