சென்னை:
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 45-வது திரைப்படம் ‘கருப்பு’. இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘கருப்பு’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் நட்டி நடராஜ், இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், படத்தின் கதை மற்றும் திரைக்கதை குறித்து ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வம் உருவாகியுள்ளது. சமூக அக்கறை மற்றும் வலுவான கதையம்சத்துடன் படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும் ஆவலும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கான முக்கிய காரணமாக படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாததே என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி வர்ணனையாளராக கலந்து கொண்டார். அப்போது போட்டியின் நடுவே ‘கருப்பு’ படத்தின் வெளியீடு குறித்து அவர் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. “நான் எடுத்த கருப்பு படம் எப்போது வெளியாகும் என்று எனக்கே தெரியவில்லை” என்று அவர் நகைச்சுவையாக கூறியதன் மூலம் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியது.
இதற்கு முன்பாக கடந்த மாதம் நடைபெற்ற ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படம் சம்மர் காலத்தில், தேர்தலுக்கு பிறகு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாகும் என்ற தகவலும் பரவியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவானது.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களிடம் நேரடியாக பேசிய அவர், “நீங்கள் காத்திருப்பதற்கான மதிப்பு கண்டிப்பாக இருக்கும். இனிமேல் நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை. இன்னும் ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் பத்து நாட்களுக்குள் ஒரு பெரிய அப்டேட் வரும். அந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும்” என்று கூறினார்.
மேலும் பேசுகையில், “ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாகும் என்ற தகவல் உண்மையல்ல. எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை, இசையமைப்பாளருக்கும் சண்டை என்று பல வதந்திகள் பரவி வருகிறது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறதால் கொஞ்சம் கோபமாக இருப்பது எனக்கு தெரியும். ஆனால் தயவுசெய்து என்னை நம்புங்கள். இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார்.
இதன் மூலம் ‘கருப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த அப்டேட் வெளியாகும் வரை சூர்யா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.