சூரத்,
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, அந்த மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்து வெளியேறினர். ஆனால் மாலை நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். பல இடங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் மாணவிகள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர். மாணவிகளின் செல்போன் தகவல்கள் மற்றும் அவர்கள் சென்றிருக்கக்கூடிய இடங்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதன்போது அவர்கள் சூரத்தில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவில் வளாகத்தின் வெளியே காணாமல் போன மாணவிகளில் ஒருவருக்குச் சொந்தமான ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த காட்சிகளில், இரண்டு மாணவிகளும் கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குள் செல்வது பதிவாகியிருந்தது. அதன் பின்னர் அவர்கள் வெளியே வராதது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த இடத்தைச் சோதனை செய்தபோது, கழிப்பறைக்குள் இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
மாணவிகளின் உடல்களுக்கு அருகில் மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் சிரிஞ்சுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்கள் தாங்களே மயக்க மருந்தை செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் என்.பி. கோஹில் கூறுகையில், உயிரிழந்த இரண்டு மாணவிகளும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் முதலாமாண்டு வணிகவியல் படித்து வந்தார். மற்றொரு மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போலீசார் அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. அதில், சாட் ஜி.பி.டி. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்தில் தற்கொலை செய்ய எந்த மருந்துகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து அவர்கள் தேடியிருப்பது தெரியவந்தது. அதேபோல், ஒரு பெண் மயக்க மருந்தை செலுத்தி தற்கொலை செய்து கொள்ளும் காட்சியின் ஸ்கிரீன்ஷாட்டும் அவர்களின் செல்போனில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தளங்களை தவறாக பயன்படுத்தும் அபாயங்கள் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் சாட் ஜி.பி.டி. மூலம் தற்கொலைக்கு வழி தேடியதாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து தொழில்நுட்ப உலகின் முக்கிய நபரான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட ஒரு பதிவிற்கு பதிலளித்த அவர், ஒரே வார்த்தையில் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். “ஐயோ கொடுமை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், மாணவிகளின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து மேலும் தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.