Home » டெல்லி குண்டு வெடிப்பு: காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட காரை சுற்றி ‘திடுக்’ திருப்பம்.

டெல்லி குண்டு வெடிப்பு: காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட காரை சுற்றி ‘திடுக்’ திருப்பம்.

புதுடில்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய கார், கடைசியாக புல்வாமாவைச் சேர்ந்த நபரிடம் விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போது, அந்தக் காரின் உரிமையாளராக புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் முகமது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இடம்பெற்ற கார் வெடிப்பு பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து டெல்லி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய வாகனம் கடைசியாக புல்வாமாவைச் சேர்ந்த நபரிடம் விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போதைய உரிமையாளராக புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் முகமது அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் புல்வாமா தொடர்பு காரணமாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரின் முதல் உரிமையாளர் சல்மான் என்பவரிடமிருந்து பிறகு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் அதையே பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. சல்மானிடமிருந்து நதீம் என்பவருக்கு விற்கப்பட்ட அந்த கார், பின்னர் மூன்றாவது முறையாக காஷ்மீர் புல்வாமா பகுதியைச் சேர்ந்த நபரிடம் கைமாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

போலீசார் தற்போது புல்வாமாவைச் சேர்ந்த உமரை தேடி வருகின்றனர். அவர் உயிரிழந்தவர்களில் ஒருவரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஹரியானாவின் பரிதாபாத் பல்கலைக்கழகத்தில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலும் இந்த சதியில் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்த விசாரணையின் போது, பெருமளவில் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பலிடமிருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதே நாளில், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், வெடிபொருட்களை பதுக்கிய கும்பலும் குண்டு வெடிப்பு நடத்தியவர்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உயர் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *