சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் நெருங்கியதுடன் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைப்பதிலும், வலுப்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. “அரசியலில் நிரந்தர பகைவர்களோ நண்பர்களோ இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைத்து அரசியல் கணக்குகளை போடுகின்றன.

தற்போதைய சூழலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. கூட்டணி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம், கடந்த தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அ.தி.மு.க.வும் முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. இந்த அரசியல் போட்டி காரணமாக மாநில அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.
இதற்கிடையே நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. கட்சி தொடங்கிய பிறகு விஜய் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள ஆதரவு காரணமாக தமிழக அரசியல் களத்தில் த.வெ.க. முக்கிய கவனம் பெறுகிறது. இதனால் முக்கிய அரசியல் கட்சிகளின் கூட்டணி அரசியலிலும் புதிய சமன்பாடுகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது தி.மு.க. தலைமையில் 26 கட்சிகள் இணைந்த ‘மெகா’ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியிலும் பல கட்சிகள் இணைந்துள்ளன. இந்த அணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வை தங்களது அணியில் சேர்க்க பா.ஜ.க. சில மாதங்களுக்கு முன்பே முயற்சிகளை தொடங்கியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் அப்போது அந்த முயற்சி வெற்றியடையவில்லை என்று கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு நடிகர் விஜய் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னதாக திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த நாளில் ஆஜராக முடியாது என்றும், சுமார் 10 நாட்களுக்கு பிறகு சி.பி.ஐ. குறிப்பிடும் மற்றொரு தேதியில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் விஜய் தரப்பில் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையிலேயே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க. இணைவதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகர் விஜய் விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்பட்டதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
த.வெ.க. கூட்டணியில் இணைந்தால் அது தி.மு.க. கூட்டணியை விட வலுவான கூட்டணியாக மாறும் என பா.ஜ.க. கணக்கிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.க்கு சுமார் 50 தொகுதிகள் வழங்கப்படலாம் என்றும், விஜய்க்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கும் வாய்ப்பும் பேசப்பட்டதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த தகவல்களை மறுத்தார். தவெகவுடன் பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே என அவர் தெரிவித்தார்.
மேலும், தவெக கட்சியில் நாளை வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ள நிலையில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பப்பட்டதற்கும் பா.ஜ.க.க்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். அதேபோல் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் இதுவரை தொடங்கவில்லை என்றும், பேச்சுவார்த்தை தொடங்கும் போது அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பேன் என்றும் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.