சென்னை,
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாவட்டத்தில் பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த விழிப்புணர்வு முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் 13 ஒளி வெளிப்பாடு கொண்ட தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் மூலம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கப்படுகின்றது. மேலும், வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரிக்கும் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள், பெரிய குப்பை சேகரிப்பு வாகனங்கள் மற்றும் 300 அரசு பேருந்துகள் வழியாகவும் தேர்தல் விழிப்புணர்வு செய்திகள் பரப்பப்படுகின்றன.
அதேபோல், 100 மின்னணு விளம்பர பலகைகள் மற்றும் 1000 பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் “நம்ம தங்கா” என்ற காகம் சின்னத்தை மையமாகக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. “எனது வாக்கு எனது உரிமை” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சுயபுகைப்பட இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடற்கரை பகுதிகளில் மணற்சிற்பங்கள் உருவாக்கப்பட்டு, மக்கள் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொம்மலாட்டம், பாரா கிளைடிங், மனித சங்கிலி, ரங்கோலி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கரகாட்டம், கானா பாடல்கள், கும்மி, தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்குட்பட திடீர் குழு நடனங்கள், வினாடி வினா போட்டிகள், கையெழுத்து இயக்கங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலமும் மக்களுக்கு வாக்களிப்பின் அவசியம் எடுத்துரைக்கப்படுகிறது. பொது இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு, மக்கள் தேர்தல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மார்ச் 31ஆம் தேதி விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோயம்பேடு சந்தை பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், கடைகளில் விழிப்புணர்வு ஒட்டுவிளக்குகள் ஒட்டப்பட்டன.
மேலும், ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.