ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரே நேரத்தில் இரு தரப்பினரும் வந்து, தாங்கள் தான் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று அவர் ராமநாதபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய தனது கட்சி தொண்டர்களுடன் வந்தார்.

அப்போது அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சாகுல் ஹமீதும் அவரது கட்சி தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் . ஒரே நேரத்தில் திமுக, தவெக கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாங்கள்தான் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்யச் செல்வோம் என்று திமுக தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். தாங்கள் தான் அந்த இடத்திற்கு முதலில் வந்தோம் என்று தவெக வேட்பாளர் தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து முதலில் தவெக வேட்பாளர் சாகுல் ஹமீது உள்ளே அனுமதிக்கப்பட்டு அவர் அலுவலக காத்திருப்பு அறையில் காக்க வைக்கப்பட்டார்.
பின்னர் இரண்டாவதாக உள்ளே நுழைந்த திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் நேரடியாக தேர்தல் அலுவலர் ஹபிபூர் ரஹ்மானிடம் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து தவெக வேட்பாளர் சாகுல் ஹமீது வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திமுக – தவெக கட்சி தொண்டர்கள் இருவரும் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், வேட்பு மனு தாக்கலின்போது இரு கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது ராமநாதபுரம் தேர்தல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.