Home » ஆந்திர வனப்பகுதியில் 7 மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொலை

ஆந்திர வனப்பகுதியில் 7 மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொலை

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி காடு பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சந்திப்பில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் நடைபெறும் இது இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவமாகும்.

இந்தச் சம்பவம் குறித்து விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டிஜிபி மகேஷ் சந்திர லத்தா கூறியதாவது: “அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி காடுகளில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது, மாவோயிஸ்ட் தலைவரான மாத்வி ஹித்மா, அவரது மனைவி மதகம் ராஜே உள்ளிட்ட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மோதலின் போது சிலர் தப்பிச் சென்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இன்று காலை 7 மணியளவில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் பெண்களும், 4 பேர் ஆண்களும் ஆவர்.

சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் ஆந்திர–ஒடிசா எல்லைப்பகுதி மத்தியக் குழு பொறுப்பாளராக இருந்த, ‘டெக் சங்கர்’ என்று அழைக்கப்படும் மேட்டூரி ஜோகா ராவும் இந்த மோதலில் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்றவராக அவர் அறியப்பட்டார். மற்ற மாவோயிஸ்டுகள் குறித்து அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *