சென்னை: சென்னையில் இன்று (நவம்பர் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், தங்கத்தில் முதலீடு செய்யும் சர்வதேச போக்குகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் பகுதியாக, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 என்ற வரலாறு காணாத உயரத்தை எட்டியது. அதன் பின்னர் தங்கவிலை உயர்வு–சரிவு முறையில் தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சரிவை கண்ட தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, தற்போது ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.92,000 ஆகியுள்ளது.
சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,368-க்கும், 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.76,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 14-ம் தேதி முதல் தங்க விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.800 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்வு: சென்னையில் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து ரூ.1,73,000-க்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

