டாக்கா, வங்காளதேசம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வங்காளதேசத்தில் மாணவர் புரட்சி தீவிரமடைந்து, அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மாணவர்களின் போராட்டம் எதிர்பாராத அளவுக்கு பரவியதால், ஹசீனா தனது பதவியை இழந்து வங்காளதேசத்தை விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதன் பின்னர் இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.
மாணவர் போராட்டத்தை ஒடுக்க முயன்றதில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஹசீனாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் விசாரணை நடத்தி, சமீபத்தில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து வங்காளதேச அரசு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்தது. இந்திய வெளியுறவுத் துறை, அந்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக அறிவித்துள்ளது.
இந்த அரசியல் பரபரப்பின் மத்தியில், வங்காளதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் அறிவித்துள்ளார். சுதந்திரமான ஜனநாயக முறையில் வாக்கெடுப்பை நடத்தும் திறனை உலகிற்கு நிரூபிக்க நாடு தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தினார். மேலும், போலியான செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுத் தேர்தலுடன் சேர்த்து “ஜூலை சாசன” வாக்குப்பதிவும் அதே நாளில் நடைபெறும். மொத்தம் 300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. வெளிநாட்டில் வாழும் வங்காளதேச மக்கள், நாளை முதல் டிசம்பர் 25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தேதிகள்:
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: டிசம்பர் 29, 2025.
வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 30, 2025 முதல் ஜனவரி 4, 2026 வரை.
மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஜனவரி 20, 2026.
மேல்முறையீடு செய்ய அவகாசம்: ஜனவரி 11, 2026 வரை.
மேல்முறையீடுகள் தீர்வு: ஜனவரி 12 முதல் ஜனவரி 18, 2026 வரை.
தேர்தல் செயல்முறைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார். இடைக்கால அரசின் தலைமையில், மாணவர் புரட்சியின் ஓராண்டுக்கு பிறகு, வங்காளதேசம் ஜனநாயக பாதையில் மீண்டும் முன்னேறுகிறது.