அமராவதி: ‘ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்கள் தங்கள் குடும்பத்தாரில் ஒருவர் கொரோனாவால் திடீரென உயிரிழக்கும்போது, அவர்களுக்கான இறுதிச்சடங்கிற்கு பணமில்லாமல் சிரமப்படுவதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ‘இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அப்போதே அறிவித்திருந்தார். அந்த திட்டத்தை இப்போது மீண்டும் தொடர்ந்துள்ளார்.
இது குறித்து ஆந்திர அரசின் தலைமைச் செயலர் அனில் குமார் சிங்கால், ”ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 2.07 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 9,271 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் அரசு சார்பில் வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஒதுக்கப்பட்ட நிதியை இந்த செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை ஆணையர் இதற்குரிய நிதியை மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒதுக்கீடு செய்வார்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

