Home » திருப்பட்டினம் தொகுதி பிரச்சினைகளுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீர்மானம்

திருப்பட்டினம் தொகுதி பிரச்சினைகளுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீர்மானம்

திருப்பட்டிணம்,

இன்று ஞாயிற்றுக்கிழமை, 09.11.2025, காலை 10.00 மணிக்கு, திருப்பட்டிணம் கொம்யூன், போலகம் கிராமத்தில், கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான திருமண மண்டபம் பக்கத்தில் உள்ள அன்பு திடல் தெற்கு தெருவில், இலக்கம் 1-ல் வசிக்கும் அப்பகுதி விவசாயி திரு. ஜெயபிரகாஷ் அவர்களின் இல்லத்தில், “இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்” அமைப்பின் கிளைத் துவக்க விழா டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அந்த தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயத்திற்கு தேவையான யூரியா விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதோடு மட்டுமல்லாமல், வேறு சில ரசாயனப் பயிர் ஊக்கிகளை அதிக விலைக்கு விவசாயிகள் வாங்குமாறு கட்டாயப்படுத்தி திணிக்கப்படுவதாகவும், அரசு இதை கண்டுகொள்ளவில்லை என்ற ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மேலும், பல சாலைகள் பழுதடைந்து உள்ளதாகவும், உதாரணமாக அன்பு திடல் தெற்கு தெருவில் சாலை அமைக்க நிரப்பப்பட்ட மண் அண்மையில் பெய்த மழையால் அரிந்துசெல்லப்பட்டு, சாலையின் நடுவே வாய்க்கால் போல கரடு முரடாக மாறி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதினால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், கோவில் மற்றும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை அத்துமீறி ஆக்கிரமித்து, அதை கடைக்கு உள்வாடகைக்கு விட்டு, சில அரசியல் காட்சிகள், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் ஆதரவோடு மக்களுக்கு இடையூறாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டு மீது, துணைநிலை ஆளுநர் ஊழல் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் திரு. காசிநாதன், திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் பல விவசாயிகள், இளைஞர்கள், இயக்கத்தின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக, கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர் நகர் கிளை ஒருங்கிணைப்பாளர் திரு. விஜயகுமார், நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இயக்கத்தின் தன்னார்வலர், அப்பகுதியைச் சேர்ந்த திரு. ஆறுமுகம், அனைவருக்கும் இறுதியில் நன்றி உரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *