கடந்த ஆண்டு டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வரிவசூல் விவரம் வெளியீடு
புதுடெல்லி,
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது. உள்நாட்டு விற்பனை, இறக்குமதி பொருட்கள், சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வருவாய், நாட்டின் பொருளாதார செயல்பாடு, நுகர்வு நிலை மற்றும் வரி சீர்திருத்தங்களின் தாக்கத்தை வெளிப்படுத்தும் முக்கியக் குறியீடாக கருதப்படுகிறது.
மாதந்தோறும் ஜி.எஸ்.டி. வசூல் தொடர்பான தரவுகளை மத்திய நிதித்துறை அமைச்சகம் கணக்கீடு செய்து வெளியிடுகிறது. இத்தரவுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் போக்கை மதிப்பிட உதவுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரி கட்டமைப்பில் முக்கிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொத்தமாக ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வசூலான ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடியை விட 6 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து கிடைத்த வருவாய் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.2 சதவீத உயர்வாகும். அதேபோல், இறக்குமதி பொருட்களிலிருந்து கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாய் 19.7 சதவீதம் அதிகரித்து ரூ.51 ஆயிரத்து 977 கோடியாக பதிவாகியுள்ளது.
இதே காலகட்டத்தில், வரி செலுத்தியவர்களுக்கு திருப்பிச் செலுத்தப்பட்ட (ரீபண்ட்) தொகை 31 சதவீதம் உயர்ந்து ரூ.28 ஆயிரத்து 980 கோடியாக இருந்தது. ரீபண்ட் தொகையை கழித்த பின்னர் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.
ஜி.எஸ்.டி.க்கு மேலாக வசூலிக்கப்படும் வரி ‘இழப்பீடு செஸ்’ என அழைக்கப்படுகிறது. இந்த செஸ் வரி புகையிலை, ஆடம்பர கார்கள், நிலக்கரி, மது உள்ளிட்ட சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்துக்குப் பிறகு, புகையிலை மற்றும் மது போன்ற சில பொருட்களை தவிர்த்து, பிற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி ரத்து செய்யப்பட்டது.
இதன் விளைவாக, கடந்த டிசம்பர் மாதத்தில் செஸ் வசூல் ரூ.4 ஆயிரத்து 238 கோடியாக குறைந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் வசூலான ரூ.12 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில் 64.7 சதவீதம் வீழ்ச்சியை காட்டுகிறது.