சென்னை: சென்னையின் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சிஆர்பிஎப் பாதுகாப்புடன் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைகள் தங்க நகை வியாபாரம், இரும்பு மொத்த வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வருகின்றன. மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கினை அடிப்படையாகக் கொண்டு இந்த அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனை எங்கு நடைபெறுகிறது?
சென்னையின் சவுகார்பேட்டை கந்தப்ப முதலி தெருவில் உள்ள தொழிலதிபர் பவர்லால் முத்தாவின் இல்லத்தில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கீழ்ப்பாக்கம் வேடலஸ் சாலையில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில், இரும்பு மொத்த வியாபாரம் செய்து வரும் நிர்மல் குமார் என்பவரின் இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கே.கே. நகர் முனுசாமி சாலை மற்றும் லட்சுமணசாமி சாலையில் தங்க நகை வியாபாரி மஹாவீர் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், எம்ஜிஆர் நகர் அண்ணா பிரதான சாலையில் உள்ள ஒரு முகவரியிலும் அதிரடி சோதனைகள் தொடர்கிறதாக தகவல் கிடைக்கிறது.
மேலும், சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாட வீதியில் உள்ள ஷாம் தர்பார் அபார்ட்மெண்டில் தொழிலதிபர் கலைச்செல்வன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், அம்பத்தூர் திருவேங்கட நகர் பகுதியில் உள்ள ‘ஆர்க் டெக் ரெசிடென்சி’யில் வழக்கறிஞர் பிரகாஷ் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் ‘சுகாலி எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த அமலாக்கத் துறை சோதனைகள் நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

