சென்னை:
சென்னையில் திரு.வி.க.நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் பல்வேறு பொதுமக்கள் பயன்பாட்டு திட்டப்பணிகள் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டங்களை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த திரு.வி.க.நகர் மண்டலத்தின் வார்டு 64-இல் உள்ள சீனிவாசா நகரில் செயல்படும் சென்னை தொடக்கப் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் பார்வையிட்டார். மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி சூழல் கிடைக்கும் வகையில் இந்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னை பெருநகர் வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் நவீன அங்காடி கட்டிடத்தையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வார்டு 68-இல் உள்ள ஜவஹர் நகரில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சி கூடத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல் வார்டு 70-இல் உள்ள ரமணா நகர், கவுதமபுரம் பகுதியில் பல்நோக்கு மையக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வரும் நியாய விலை கடைகளின் இறுதிக்கட்ட பணிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதியின் வார்டு 71-இல் உள்ள புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த பூங்காவில் நடைபாதை, கழிப்பறை வசதி, பாதுகாவலர் அறை, கேஜிபோ, திறந்தவெளி உடற்பயிற்சி பகுதி, சிறுவர்கள் விளையாடும் பகுதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக சாய்தள சறுக்கு விளையாட்டு, ஏறும் விளையாட்டு, ஊஞ்சல், குடை ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனுடன் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய Street Workout, Forearm Twirl, Chest Press, Shoulder Twirl, Cross Trainer, Core Twister, Leg Press, Pedaling Bicycle போன்ற திறந்தவெளி உடற்பயிற்சி சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் எழும்பூர் சட்டமன்ற தொகுதியின் ராயபுரம் மண்டலத்தில் உள்ள வார்டு 58-இல் ராட்லர் தெருவில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதி மூலம் 595 சதுர அடி பரப்பளவில் இந்த பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் பயிற்சி மையத்தில் உட்புற மற்றும் வெளிப்புற பயிற்சிக்கான வசதிகள், பாதுகாவலர் அறை, அலுவலக அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி பெற்று தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி, வட்டார துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.