சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு கடந்த செப்.28-ம் தேதி நடைபெற்றது. 645 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இத்தேர்வை 4 லட்சத்து 55 ஆயிரத்துக்கு்ம் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். தேர்வு முடிவு டிசம்பரில் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுதலாக 625 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி பிற்சேர்க்கை அறிவிப்பின்படி தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை உதவிப் பிரிவு அலுவலர், கால்நடை பராமரிப்புத் துறை கால்நடை ஆய்வாளர் (கிரேடு-2) உள்ளிட்ட புதிய பதவிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் கால்நடை ஆய்வாளர் பதவியில் மட்டும் 439 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு பட்டப்படிப்புடன் பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல் பாடம் படித்திருக்க வேண்டும் என்று கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2ஏ பணிகளில் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலைத்தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் கால்நடை ஆய்வாளர் பணி தொடர்பாக, பிளஸ் 2-வில் உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றை நீங் கள் படித்திருக்கிறீர்களா? என்ற பத்தியில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ (‘எஸ்’ ஆர் ‘நோ’) என்பதை பதிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஓடிஆர் ‘ரிஓபன்’ செய்யப்பட்டுள்ளது. இது நவ.22 (இன்று) முதல் 25-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை 4 நாட்கள் திறந்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

