திருவனந்தபுரம்:
கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் தேங்கிக் கிடக்கும் அல்லது அசுத்தமான தண்ணீரில் வாழும் அமீபா மூக்கு, வாய் வழியாக உடலில் நுழைந்து மூளைத்தாக்கத்தை ஏற்படுத்துகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோயால் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டம் ஆனாடு பகுதியைச் சேர்ந்த வினயா (வயது 26) நேற்றுமுன்தினம் அமீபா மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவர் கடந்த 40 நாட்களாக நெடுமங்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்; ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் ஏற்பட்டது.
இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே மாதத்தில் 17 பேர் பாதிப்பு – 7 பேர் பலி
இந்த மாதத்திலேயே 17 பேர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தொடர்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திருவனந்தபுரத்தில் மட்டும் 8 பேர் பலி
இந்த நோயால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

