பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டில் தோல்வியடைந்தது.

முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து பிரிஸ்பேனில் நடைபெற்ற பகல்–இரவு (பிங்க் பந்து) டெஸ்டில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 334 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா 511 ரன்கள் குவித்தது.

177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 75.2 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் மைக்கேல் நேசர் 5 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

வெற்றிக்காக 65 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பில் 69 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த தோல்விக்குப் பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: “அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் மீண்டும் தோல்வியை சந்தித்தோம். சிறிய தருணங்களில் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மொத்தத்தில் பிடியை இழந்து விடுகிறோம். இத்தகைய சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ஆழமாக யோசிக்க வேண்டும். தேவைப்படும் போது இன்னும் அதிகமாக போராட வேண்டும்.

ஆஸ்திரேலியா பலவீனமானவர்களுக்கு ஏற்ற இடம் அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. ஆனால் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளதால் வெற்றி பெற ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். எங்களுக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் உள்ளன; அதை மாற்றும் திறன் எங்களிடம் உள்ளது. எங்கள் டிரஸ்ஸிங் ரூம், வீரர்கள், பயிற்சி குழு மற்றும் எங்களை சிறந்தவர்களாக மாற்ற உதவும் அனைவரின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அடுத்த மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இதற்கு முன்பும் 2-0 என்ற கணக்கில் பின்தங்கி இருந்துள்ளோம். எனவே என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் வெட்கப்படப் போவதில்லை. ஆனால் ஆஷஸ் கோப்பையை மீண்டும் இங்கிலாந்துக்கு கொண்டு வர விரும்பினால், முதல் இரண்டு ஆட்டங்களில் எங்கே தவறு நடந்தது என்பதைப் பார்த்து அவற்றை விரைவாகச் சரிசெய்ய வேண்டும்,” என்றார்.