ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து – கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உணர்ச்சிமிகு கருத்து
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்டிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 85 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 349 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 435 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 102.5 ஓவர்களில் 352 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த தோல்வியால், ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், உணர்ச்சிமிகு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: “நாங்கள் இங்கு வந்த கனவு இப்போது முடிந்துவிட்டது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அணியின் ஒவ்வொருவரும் வேதனைப்படுகிறார்கள். நாங்கள் ஒரு இலக்கை மனதில் கொண்டு வந்தோம், ஆனால் அதை அடைய முடியவில்லை. இது வலிக்கிறது. ஆனால் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன.
பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக செயல்பட்டதே இரு அணிகளுக்குள்ள வித்தியாசம். இந்த விளையாட்டு, நீங்கள் எப்படி பேட் செய்கிறீர்கள், பந்து வீசுகிறீர்கள், பீல்டிங் செய்கிறீர்கள் என்பதையே அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆட்டத்தில் இருந்து சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அணியாக நாங்கள் எங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டோம். ஆனால் விடாமுயற்சியுடன் போராடவில்லை.
எங்கள் செயல்திறன், ஆஸ்திரேலியாவுக்கு வந்து அவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு இல்லை. ஸ்கோர்லைன் அதைப் பிரதிபலிக்கிறது. இருந்தாலும், எங்களுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. நாங்கள் தோல்வியுடன் இந்த தொடரை முடிக்கப் போவதில்லை. மைதானத்தில் எல்லாவற்றையும் கொடுத்து விளையாடப் போகிறோம். ரசிகர்கள் இந்த கடைசி இரண்டு ஆட்டங்களைப் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஆட்டத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.