தென்காசி: ‘தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்’ என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமிக்கு ஓட்டு சேகரித்து, புளியங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகிலிருந்து சிந்தாமணி பேருந்து நிலையம் வரை சாலை வழியாக ராஜ்நாத் சிங் சென்றார். சாலையின் இரு புறமும் கூடியிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகத்தால் வரவேற்பு அளித்தனர்.

இந்த சாலை வலம் பிறகு, ராஜ்நாத் சிங் பேசுகையில், திமுக தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளதாகவும், சட்டம்–ஒழுங்கு நிலை மோசமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், குழந்தைகள் மீது குற்றங்களும், தலித் மக்கள் மீது நடக்கும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது திமுக அரசு தோல்வியடைந்துள்ளதை காட்டுகிறது என வலியுறுத்தினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். திமுக தமிழகத்தை அழிவுப் பாதையில் தள்ளிக் கொண்டிருக்கிறது எனவும் அவர் நினைவு கூறினார்.
திமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஊழல் செய்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு அமைச்சரையும், அவரது மகனையும் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று சொல்வதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இன்னொரு அமைச்சர் பெயர் சட்டவிரோத மணல் கொள்ளையில் தொடர்புபட்டுள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளில் சட்டவிரோத மணல் கொள்ளையால் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தின் இயற்கை வளங்களை நேரடியாக கொள்ளையடித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
திமுக எம்.எல்.ஏ. ஒருவரின் மருத்துவமனையில் சிறுநீரக திருட்டு தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதாகவும், திமுக அரசு ஏழை மக்களின் உயிர்களுடன் விளையாடுவதாகவும் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இத்தகைய ஆட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் இறந்தது, திமுக அரசின் அலட்சியத்தால் நடந்தது என அவர் குற்றம் சாட்டினார். சட்டவிரோதமாக சாராயம் வெளிப்படையாக விற்பனையாகிறது என்றும், அலட்சியத்துக்கும், குழப்பத்துக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது எனவும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இத்தகைய பிரச்சினைகளை வேரோடு அழிக்கும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சாராய மாபியாக்களை ஒழிக்கும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதி மொழி அளித்தார். திமுக தமது நம்பிக்கைகளை கேலி செய்து வருவதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது, ஹிந்து மத நம்பிக்கைகளை பேணும் மக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களின் உரிமைகளை பறிக்கிறார்கள் எனவும், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்க சென்ற பக்தர்களை தடுத்து கைது செய்ததாகவும் குற்றம் சாட்டினார். உயர் நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று சொன்னதாகவும், ‘தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்’ என்றும் அவர் உறுதி மொழி அளித்தார்.
இது போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவரும் மசோதாவை திமுக மற்றும் அதன் கூட்டணி தடுத்து நிறுத்தியதாகவும், தமிழகத்தின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மாநிலத்தின் கடன் 10.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி தரவில்லை என்று பொய் சொல்வதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். NDA ஆட்சி வரும்போது அந்த பணம் திருப்பி எடுக்கப்பட்டு, மக்களின் பணமாக மாற்றப்படும் என்று அவர் உறுதி மொழி அளித்தார். மக்கள் மாற்றத்தையும், வளர்ச்சியையும் விரும்புகிறார்கள்; நாளை நமது என்று அவர் முடித்து வைத்தார்.