ஊட்டி: “தமிழக கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டி சட்டமன்றத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பல்வேறு தரப்பு சங்கங்கள், அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தத் தேர்தல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும். வரும் மே 4‑ம் தேதி வெற்றி நிச்சயமாகி, புதிய அரசு அமைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யும். ஸ்டாலின் குடும்ப ஆட்சியால் தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது. இது ஒரு சிறிய குடும்ப அரசு அல்ல; மு.க.ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி ஆகியோரால் ஆட்சி மேற்கொள்ளப்படுகிறது. டாஸ்மாக் ஊழல், பொதுத்துறை ஒப்பந்த ஊழல், நில ஒதுக்கீடு ஊழல் என அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. தமிழக இளைஞர்கள் அரசு வேலை பெற கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இது தமிழக மக்களால் எப்போதும் ஏற்க முடியாதது.
தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பெண்களின் மதிப்பையும் மதிக்காத மனநிலை கொண்ட உதயநிதி ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் செல்லும் இடங்களில் மக்கள் கோபத்துடனும், அதிருப்தியுடனும் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின், உதயநிதியை துணை முதல்வராக்கிவிட்டு, இதற்குப் பிறகு அவரை முதல்வராக்க திட்டமிட்டு வருகிறார். ஆனால் இந்த ஒரு குடும்பத்தின் ஊழல் மற்றும் மோசமான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதிமுக, பா.ஜ., பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட தே.ஜ., கூட்டணி ஒற்றுமையாக இணைந்து, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் ஊழல் ஆட்சியை மாற்ற போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீலகிரி மாவட்டத்தின் இந்த அழகிய ஊரில் நான் தற்போது இருக்கிறேன். எங்களுடைய நீண்டகாலத் தொண்டரும், 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கும் எடுப்பின் வீரருமான போஜராஜன், இந்தத் தொகுதியில் நிச்சயம் 100% வெற்றிபெறுவார். எங்களது சகோதரர் வின்னோத்துடன் இணைந்து, அதிமுக தொண்டர்களுடன் கைகோர்த்து அவரை வெற்றிபெறும் வண்ணம் பாடுபடுகிறோம். தமிழ்நாடு முழுவதும் இந்தக் கூட்டணி ஐக்கியமாகச் செயல்படுவதால், வெற்றி நிச்சயம் என நீங்கள் நம்ப வேண்டும். மக்கள் ஊழல் மற்றும் பெருவாரியாக இழந்த நம்பிக்கைகளை மறக்க மாட்டார்கள். அதற்கு மாற்றம் தேவை; அந்த மாற்றத்தை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கொண்டு வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.