சென்னை,
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதற்கு முன் அவர் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் பொதுமக்களிடம் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது உரையாற்றிய விஜய், பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்கியதற்கான காரணத்தையும் விளக்கினார். “எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் தொடங்கலாம். ஆனால் வீட்டின் வாசலில் இருந்து தொடங்குவது சிறந்த அறிகுறியாக இருக்கும். அதனால் தான் இந்த தொகுதியை தேர்வு செய்தேன்” என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதாகக் கூறிய அவர், “ஒரு முதிய பெண்ணுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு நாடா அல்லது காடா என்ற கேள்வி எழுகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தின் பாதுகாப்பு சூழ்நிலையைப் பற்றி பேசும்போது, “ஐந்து ஆண்டுகளாக காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியானால் இந்த ஆட்சி ஏன் தேவையென மக்கள் கேட்க வேண்டிய சூழல் உள்ளது” என்று விமர்சித்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். “குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த ஆட்சியின் நிலைமை என்ன என்பது புரியும்” என்று கூறினார். மேலும், மக்கள் நலனை விட தனிப்பட்ட நலன்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
அதோடு, வேலைவாய்ப்பு தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். நகராட்சி துறையில் வேலை வழங்குவதாக கூறி லஞ்சம் பெறப்பட்டு, தகுதி இல்லாதவர்களுக்கு வேலை வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இது போன்ற முறைகேடுகள் பொதுமக்களை பாதிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் முறைகேடுகள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்தார். “பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிகள் நடைபெறலாம். ஆனால் மக்கள் அதனை ஏற்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். வாக்காளர்கள் தங்களது உரிமையை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விஜய்யின் இந்த பேச்சு அங்கு கூடியிருந்த மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது பிரசாரம் பெரம்பூர் பகுதியில் தேர்தல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.