
நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் அடையாளங்களை அவரது அனுமதி இல்லாமல் எந்த அமைப்போ, இயக்கமோ அல்லது தனிநபரோ பயன்படுத்தக் கூடாது என ரசிகர் மன்றம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக பல்வேறு சமூக, அரசியல் மற்றும் நலத்திட்ட நிகழ்வுகளில் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து ரசிகர் மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி எந்தவொரு அமைப்பும் ஆதரவு பெற்றதாகவோ அல்லது தொடர்புடையதாகவோ காட்ட முயற்சிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சில பிரபலங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்தியில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகழை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும், குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வெளியிடப்பட்டுள்ளதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.