பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தும் மெட்ரோ ரெயில் சேவையில் இன்று காலை துயரச் சம்பவம் ஒன்று ஏற்பட்டது. ஊதா வழித்தடத்தில் வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அலுவலகம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் செய்த பலரும் ரெயிலில் இருந்தனர்.
கெங்கேரி மெட்ரோ நிலையம் வந்த தருணத்தில், வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஊதா வழித்தடத்தில் மெட்ரோ சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆரம்ப விசாரணையில், உயிரிழந்தவர் ஷந்தாகோட் பட்டீல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரத்தில் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் மெட்ரோ மீது நம்பிக்கை வைத்து பயணித்த மக்கள் கடும் அசௌகரியத்தை சந்தித்தனர்.
பின்னர், மெட்ரோ நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுத்ததின் மூலம், காலை 9.40 மணிக்குப் பிறகு ஊதா வழித்தடத்தில் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கம்போல மெட்ரோ ரெயில்கள் இயங்கத் தொடங்கின.